கடலூர்
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பெற்ற 27.12.1956ஆம் நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழிச் சட்ட வாரமாகக் கொண்டாடப்பெறுதல் வேண்டும் என்று அரசால் ஆணையிடப்பெற்றுள்ளது. அதனடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் 02.03.2020 (திங்கள்கிழமை) முதல் 08.03.2020 (ஞாயிற்றுக்கிழமை) வரை ஒருவார காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பெறவுள்ளது.
ஆட்சிமொழிச் சட்ட வாரவிழா கொண்டாட்டங்களின் நிகழ்வுகளாக கணினித் தமிழ் விழிப்புணர்வுக் கருத்தரங்கம், ஆட்சிமொழி மின்காட்சியுரை, தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்பு, வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகைகள் அமைத்திடுவதற்கு வலியுறுத்தி வணிக நிறுவன உரிமையாளர்கள், வணிக நிறுவன அமைப்புகளுடன் கூட்டம், பட்டிமன்றம், ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம், விழிப்புணர்வுப் பேரணி ஆகியவை நடைபெற உள்ளன.
தமிழ்நாடு அரசு, வாரியங்கள், கழகங்கள், அரசு உதவிபெறும் அமைப்புகள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், தமிழமைப்புகளின் நிருவாகிகள், தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், வணிகர்கள், வணிகர் சங்க நிருவாகிகள், பள்ளி-கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் ஆட்சிமொழிச் சட்ட வார விழாவில் கலந்து கொள்ளலாம்.
நிகழ்விடம், நாள், நேரம் குறித்த விவரங்கள் அனைத்தையும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் அறிந்துகொள்ளலாம். ஆட்சிமொழிச் சட்ட வாரவிழா நிகழ்வுகளில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.